பாலு மகேந்திரா (Balu
Mahendra)
பிறப்பு:
இவர் இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
1939 மே 19 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார்.
அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.
ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தேசிய விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான தேசிய விருது
கோகிலா(கன்னடம்) — 1978
மூன்றாம் பிறை(தமிழ்) — 1983
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது
வீடு(தமிழ்) — 1988
சந்தியா ராகம்(தமிழ்) —1990
வண்ண வண்ண பூக்கள்(தமிழ்) —1992
மாநில அரசு விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான மாநில அரசு விருது
நெல்லு(1974) — கேரள அரசு
பிரயாணம்(1975) — கேரள அரசு
சிறந்த திரைக்கதைக்கான மாநில அரசு விருது
கோகிலா(1977) — கர்நாடக அரசு
நந்தி விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான நந்தி விருது
மனவூரி பண்டவலு(1978)
நிரீக்சனா(1982)
ஃபில்ம் ஃபேர் விருதுகள்
சிறந்த இயக்குனர்
மூன்றாம் பிறை(தமிழ்) —1983
. ஒலங்கல்(மலையாளம்) —1983
. வீடு(தமிழ்) — 1988
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம்,வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன.ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் அவரே.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ராம், வெற்றி மாறன், சீமான் சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.
இயக்கிய திரைப்படங்கள்
1.
கோகிலா
2. அழியாத கோலங்கள்
3.
மூடுபனி
4.
மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
5.
ஓலங்கள் (மலையாளம்)
6.
நீரக்ஷ்னா (தெலுங்கு)
7.
சத்மா (ஹிந்தி)
8.
ஊமை குயில்
9.
மூன்றாம் பிறை
10. நீங்கள் கேட்டவை
11. உன் கண்ணில் நீர் வழிந்தால்
12. யாத்ரா
13. ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
14. இரட்டை வால் குருவி
15. வீடு
16. சந்தியாராகம்
17. வண்ண வண்ண பூக்கள்
18. பூந்தேன் அருவி சுவன்னு
19. சக்ர வியூகம்
20. மறுபடியும்
21. சதி லீலாவதி
22. அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
23. ராமன் அப்துல்லா
24. ஜூலி கணபதி
25. அது ஒரு கனாக்காலம்
26. தலைமுறைகள்
பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்
பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்
இவர் பூனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார் சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.
பாலு மகேந்திரா பற்றி சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்)
தூர்தர்ஷனின் சிறப்பு தமிழ்ச் சிறுகதைகள் வரிசையில் ‘பரிசு’ சிறுகதையை பாலுமகேந்திரா தொலைப்படமாக்கி இருக்கிறார். அது தொடர்பாக என்னைப் பேட்டி எடுத்தார். பேட்டி
என்பதைவிட, இருவரும் கொஞ்ச நேரம்பேசிக்கொண்டிருந்தோம். என்னை ஒரு அறையில் செயற்கை விளக்கில்லாமல் ஜன்னலோரம் உட்கார்த்தி வைத்து, ஒரே ஓர் தெர்மோகோல் வைத்துவிட்டு, காமிராகோணத்தைச் சற்று திருத்தி அமைத்துவிட்டு எதிரே உட்கார்ந்து கொண்டார்.பல விஷயங்கள் பற்றிப் பேசினோம். பேட்டி முடிந்து படம் போட்டுக் காட்டினபோது, ‘அட…. இது நானா….?’ என்று ஆச்சரியமாக இருந்தது.
எல்லோரும் பயன்படுத்தும் காமிராதான். தெர்மோகோல் ஏராளமாக சென்னையில் கிடைக்கிறது.
இருந்தும்,எதை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஒரு பாலுமகேந்திரா தான்இருக்கிறார்.
பாலுவுடன் பழக்கம் என் ஆரம்ப எழுத்துக் காலங்களிலேயே தொடங்கியது.
விசாகப்பட்டணத்தில் அவர் ‘சங்கராபரணம்‘ படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘மறுபடியும் கணேஷ்‘ படித்துவிட்டு, அதைப் படமாக எடுக்கப்போவதாக அனுமதி கேட்டு அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார். பெங்களூருக்கு அவர் ‘கோகிலா‘ படம் எடுக்க வந்திருந்தபோது, கமல்ஹாசன் அவரை எனக்கு அறிமுகம் செய்வித்தார். மூவரும் நிறையப் பேசினோம்.
பின்னர்,‘கரையெல்லாம் செண்பகப்பூ‘வை பாலு மகேந்திரா எடுப்பதாக, நடராஜன்
(பிற்பாடு பிரமிட்) தயாரிப்பதாக, காலஞ்சென்ற ஷோபா அதில் நடிப்பதாக இருந்தது.
திறமையாக திரைக்கதை அமைத்து ரொம்ப உற்சாகமாக இருந்தார். ஒரு கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
பாலுஅதற்குப் பதில் ‘மூடுபனி‘ எடுத்தார். பின்னர், பல சந்தர்ப்பங்களில் நான் திரைக்கதை
எழுத, அவர் படம் எடுக்கும் நிலைக்குக் கிட்டே கிட்டே வந்தோம். அவருக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற என் ஆசை பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது. ஓரளவுக்கு பாலு மகேந்திரா கதை நேரத்தில் என் சிறுகதைகள்
பத்தையும், ஒரு குறுநாவலையும் சின்னத்திரைக்கு செய்து கொடுத்தார்.
சற்றே சமாதானமானோம்.
சமயத்தில் ஷோபாவைச் சந்திக்க நேர்ந்தது. சட்டென்று அறைக்குள் நுழைந்து பாலுவின் கழுத்தை ‘அங்கிள்’ என்று கட்டிக்கொண்டார். என்னுடன் வந்திருந்த என் மனைவி
வீட்டுக்கு வந்ததும்,இது அங்கிள் உறவு இல்லை’ என்றாள். சில தினங்கள் கழித்து
குமுதம் இதழில் இருவரும் மணந்து கொண்ட செய்தி போட்டோவுடன் வந்திருந்தது.
அடுத்த ஆண்டு அந்தப் பெண்ணின் தற்கொலைச் செய்தி.
அந்த இளம் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று வியந்திருக்கிறேன். அதுபற்றி பாலு சொனன தகவல்கள் அந்தரங்கமானவை. அவருடன் என் நட்பின் மரியாதை கருதி அவற்றை நான் எழுதவில்லை.
சுஜாதாவின் பல நாவல்கள், படமாக்கப்படும்போது அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கப்படுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார். அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம். ஆயினும் அவரே
‘தன் நாவல்கள் இவரால் படமாக்கப் படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின்
அது பாலு மகேந்திரா தான்.
அம்பலம் மின்னிதழில்சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே பாலு மகேந்திரா பற்றிகீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
”என் நாவல்கள் எதுவும்அவரால்மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்யஅவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில். எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை. தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார்.
இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.
No comments:
Post a Comment