Monday, February 16, 2015

அன்னிய வந்து புகல் என்ன நீதி?


அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் தோன்றிய பார்த்தீனியச் செடியின் கொடிய விளைவுகள் ஆப்பிரிக்காஅவுஸ்ரேலியா, ஆசியா கண்டங்களில் அதிகமாக உணரப்பட்டது
அமெரிக்காவிலிருந்து கோதுமைத் தானியங்களோடு பார்த்தீனியம் விதைகளும் கலந்து இந்தியாவிற்கு மும்பைத் துறைமுகத்தின் வழியாக 1956 ஆம் ஆண்டு வந்திறங்கின. அங்கிருந்து இந்திய இராணுவத்தின் வருகையுடன் (1987ம் ஆண்டின் பிற்பகுதியில்) இலங்கையின் வடக்கில் வந்திறங்கின.

பார்த்தீனியம் பூண்டு, சீதேவியார் செங்கழுநீர் , செவ்வந்தி போன்ற தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடி ஆகும். ஒன்றரை மீட்டர் உயரத்துக்கும் மேலாக வளரக் கூடியது. பார்த்தீனியச் செடிகள் காலியிடங்கள், தரிசு நிலங்கள், பயிர் நிலங்கள் , குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், பழத் தோட்டங்கள் , வீதியோரங்கள், கரையோரங்கள் என அனைத்து இடங்களிலும் வளர்ந்து வருகின்றன.
பார்த்தீனியச் செடிகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் பரவி,நெருக்கமாக முளைத்து, நிமர்ந்து சடைத்து விரைவிலேயேபச்சைக் கம்பளம்விரித்தது போல நிலத்தை மூடிவிடுகின்றது.
பார்த்தீனியச் செடிகள், களைகளுக் கெல்லாம் தலையாயக் களையாகும். இதன் தண்டுகள், கிளைகள் மற்றும் இலைகள் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இச்செடியானது அதிக எண்ணிக்கையிலான பூக்களையும்,குறைந்த எடையுடைய விதைகளையும் உற்பத்தி செய்கிறது.அதன் விதைகள் குறைந்த எடை உள்ளதால் காற்றின்மூலம் மற்றஇடங்களுக்கு எளிதில் விரைவாகப் பரவுகிறது.
ஒரு பார்த்தீனியம் செடியானது 2500முதல் 5000வரையிலான விதைகளை உற்பத்தி செய்கிறதுமேலும்,பார்த்தீனிய விதைகள் முளைப்பதற்குத் தேவையான சூழ்நிலைகள் இல்லாத போது, சாதகமான சூழ்நிலை வரும் வரை 20ஆண்டுகள் கூட உறக்கத்தில் கிடந்து முளைக்கக் கூடிய தன்மை வாய்ந்தது.பார்த்தீனியம் செடியானது 1987ஆம் ஆண்டு கோப்பாய் பிரதேசத்திலேயே முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடு மற்றும் கோதுமை தானியங்கள் மூலம் இது பரவப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளான வசாவிளான், குட்டியப்புலம், நெல்லியடி, கோப்பாய், ஈவினை, புன்னாலைக்கட்டுவான், தோட்டவெளி, வதிரி ஆகிய இடங்களிலேயே இந்தச் செடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. 
பார்த்தீனியம் செடிகளின் கீழ் செடி கொடிகள் எதுவும் முளைத்து வளர முடிவதில்லை. தண்ணீருக்காகவும், சூரிய ஒளிக்காகவும், வேர்ப்பிடி மண்ணுக்காகவும் செடிகள் போராடிச் சாகின்றன. இவற்றின் மீது பார்த்தீனியச் செடிகள் நஞ்சூட்டி அழிக்கிறது.
பார்த்தீனியம்- பார்த்தீனியன், அம்புரோசின் போன்ற நச்சு வேதிப்பொருள்களைச் சுரக்கிறது. இந்த நச்சுப் பொருட்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் நமது நாட்டுத் தாவரயினங்கள் அழிந்து விடுகின்றன. ‘எதற்கும் அடங்காமல் எதனையும் அடக்காமல்பல ஆண்டு காலமாக இயற்கைச் சம நிலையில் பெரும் பங்காற்றி வந்த உள்ளூர் தாவர இனங்களின் சாம்பல் மீது நின்று கொண்டு பார்த்தீனியம் கோலோச்சுகிறது.
  பார்த்தீனியச் செடியானது கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
  
வேளாண்மைப் பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. வேளாண்மை உற்பத்தியில் 30% குறைக்கிறது.

மண்ணில் கசிய விடும் நச்சுப் பொருட்களின் மூலம் பயிர்களின் வளர்ச்சியைத் தாக்குகிறது.

உளுந்து,பயறு போன்ற பயிர்களின் அருகாமையில் பார்த்தீனியம் செடிகள் வளரும் போது பயிர்களின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கிறது.

அவரையினப் பயிர்களின்,சிறப்பாக அவற்றின் வேர்களில்இரைசோபியம்பாக்டீரியாக்களைக் கொண்ட வேர் முடிச்சுகள் காணப்படுகின்றன. இவை, நைட்ரஜன் வாயுவைத் தாவரங்கள் உறிஞ்சக் கூடிய அயனிநிலைக்கு மாற்றித் தருவதுடன், வளி மண்டபத்தில் நைட்ரஐனின் சமநிலையைப் பேணியும் வருகின்றன.பார்த்தீனியச் செடிகளின் நஞ்சுகள் இந்த வேர் முடிச்சுகளையும் விட்டு வைப்பதில்லை என தாவரவியல் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பார்த்தீனியச் செடிகள் மனிதர்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

பார்த்தீனியம் செடிகள் பரவியுள்ள இடங்களில் காற்றில் மிதக்கும் மகரந்தங்களில், பார்த்தீனியச் செடிகளின் மகரந்தங்கள் தான் அதிகம் உள்ளது. இம்மகரந்தங்களும் தம்மீது நச்சுப் பொருட்களை பூசி வைத்துள்ளன. இதனைச் சுவாசிப்பவர்கள்ஆஸ்த்மா' நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

பார்த்தீனியம் செடியைத் தொடர்ச்சியாகத் தொடுபவர்களுக்கு தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படுகிறது.

பார்த்தீனியம் செடிகளால் ஏற்படும் நோய்கள் எவ்வித மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படுவதில்லை.

பார்த்தீனியம் செடிகள் கலந்த பசுந்தீவனங்களை உண்ணும் கால்நடைகளின் பால் கசப்புத் தன்மை பெறுகிறது.

பார்த்தீனியச் செடிகள் கரியமில வாயுவை அதிகமாக வெளிவிடுவதால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பார்த்தீனியம் செடிகள் பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துகிறது.

இவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பார்த்தீனியம் செடிகள் அழிப்பை இயக்கமாக நடத்திட வேண்டும்.
இதை கட்டுப்படுத்த நாம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள்
பார்த்தீனியம் செடிகளை வேருடன் பிடுங்கி மண்ணுக்குள் புதைப்பதால் அவை மக்குரமாகிவிடுகிறது.
உயிரியல் முறையில் பார்த்தீனியச் செடிகளின் இலைகளை விரும்பி உண்ணும் பூச்சிகளை விட்டும் கட்டுப்படுத்தலாம்.
பார்த்தீனியச் செடிகள் அதிகம் உள்ள இடங்களில் கேசியா இனத்தைச் சார்ந்த எதிரிச் செடிகளை வளரவிட்டும் இவை பரவாமல் தடுக்கலாம்.

நிலத்தை நன்கு உழுது களைகளின்றி பண்படுத்தும் போதும் பார்த்தீனியம் செடிகள் வளரவாய்ப்பு இல்லாமல் செய்யலாம்.
24D,(gamaxin) கிரமாக்சின் என்ற ரசாயனங்களை நீரில் லிட்டருக்கு 4மி.கி.\மி.லிகரைத்து தெளித்தால் அழிந்துவிடும்.
பார்த்தீனியம்  செடிகளை கட்டுப் படுத்தும் எளிய வழி, சிக்கனமான வழி
அனைவரும் உடனடியாக செய்யக்கூடிய வழிமுறை என்ன வெனில் ஒரு கிலோ உப்பையும்,ஒரு லிட்டர் சோப்பு எண்ணையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதாகும். இதனால் மூன்று தினங்களுக்குள் பார்த்தீனியச் செடிகள் வாடி வதங்கி கரிந்து அழிந்து போகும்.
மக்களிடம் மார்த்தீனியச் செடிகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டு, பயிர்களையும், கால் நடைகளையும், மனிதர்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்திட வேண்டும்.


எந்த  நிலை வாய்த்தாலும் நம்மில்
அனைவருக்கும் அந்த நிலை பொதுவாகும்