பாலு மகேந்திரா ( Balu
Mahendra)
பிறப்பு:
20 மே 1939 -
13
இவர் இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார் . சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர் . தமிழ் , தெலுங்கு , கன்னட , மலையாள , ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர் .
1939 மே 19 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா . இயற்பெயர் , மகேந்திரா . அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர் , கல்லூரி அதிபர் . லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார் . பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971 ல் தங்கப்பதக்கம் பெற்றார் .
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ' செம்மீன் ' படப்புகழ் ராமு காரியத் அவரது ' நெல்லு ' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார் .
அப்படத்துக்கு 1972 ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார் . அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார் . கெ . எஸ் . சேதுமாதவனின் ' சுக்கு ',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி ' ' சட்டக்காரி ' பி என் மேனோனின் ' பணிமுடக்கு ' போன்றவை முக்கியமான படங்கள் . தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார் .
ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார் . இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம் . முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர் . 1977 ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ' கோகிலா ' வை கன்னட மொழியில் இயக்கினார் . பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977 ல் வெளியாயிற்று . 1978 ல் தமிழில் அவரது முதல் படமான ' அழியாத கோலங்கள் ' வெளியாயிற்று . பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .
தேசிய விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான தேசிய விருது
கோகிலா ( கன்னடம் ) — 1978
மூன்றாம் பிறை ( தமிழ் ) — 1983
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது
வீடு ( தமிழ் ) — 1988
சந்தியா ராகம் ( தமிழ் ) —1990
வண்ண வண்ண பூக்கள் ( தமிழ் ) —1992
மாநில அரசு விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான மாநில அரசு விருது
நெல்லு (1974) — கேரள அரசு
பிரயாணம் (1975) — கேரள அரசு
சிறந்த திரைக்கதைக்கான மாநில அரசு விருது
கோகிலா (1977) — கர்நாடக அரசு
நந்தி விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான நந்தி விருது
மனவூரி பண்டவலு (1978)
நிரீக்சனா (1982)
ஃபில்ம் ஃபேர் விருதுகள்
சிறந்த இயக்குனர்
மூன்றாம் பிறை ( தமிழ் ) —1983
. ஒலங்கல் ( மலையாளம் ) —1983
. வீடு ( தமிழ் ) — 1988
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு , சந்தியாராகம் , வண்ண வண்ண பூக்கள் . சிறந்த திரைக்கதைக்கு கோகிலா , அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன . ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது . இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் அவரே .
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர் . " சேது ", " நந்தா ", " பிதாமகன் " போன்ற படங்களை இயக்கிய பாலா , பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் . ராம் , வெற்றி மாறன் , சீமான் சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர் . பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி , ஜி . கே . மூர்த்தி , சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர் . ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை . பாலு மகேந்திரா இயக்கிய ' கதைநேரம் ' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது .
இயக்கிய திரைப்படங்கள்
1.
கோகிலா
2. அழியாத கோலங்கள்
3.
மூடுபனி
4.
மஞ்சு மூடல் மஞ்சு ( மலையாளம் )
5.
ஓலங்கள் ( மலையாளம் )
6.
நீரக்ஷ்னா ( தெலுங்கு )
7.
சத்மா ( ஹிந்தி )
8.
ஊமை குயில்
9.
மூன்றாம் பிறை
10. நீங்கள் கேட்டவை
11. உன் கண்ணில் நீர் வழிந்தால்
12. யாத்ரா
13. ரெண்டு தொகல திட்ட ( தெலுங்கு )
14. இரட்டை வால் குருவி
15. வீடு
16. சந்தியாராகம்
17. வண்ண வண்ண பூக்கள்
18. பூந்தேன் அருவி சுவன்னு
19. சக்ர வியூகம்
20. மறுபடியும்
21. சதி லீலாவதி
22. அவுர் ஏக் ப்ரேம் கஹானி ( ஹிந்தி )
23. ராமன் அப்துல்லா
24. ஜூலி கணபதி
25. அது ஒரு கனாக்காலம்
26. தலைமுறைகள்
பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்
பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்
இவர் பூனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு , இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி , தனது குறும்படமான " செங்கோட்டை " யை கொழும்பு " சவோய் " திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார் சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார் .
பாலு மகேந்திரா பற்றி சுஜாதா கூறுகிறார் …. ( கற்றதும் பெற்றதும் )
தூர்தர்ஷனின் சிறப்பு தமிழ்ச் சிறுகதைகள் வரிசையில் ‘ பரிசு ’ சிறுகதையை பாலுமகேந்திரா தொலைப்படமாக்கி இருக்கிறார் . அது தொடர்பாக என்னைப் பேட்டி எடுத்தார் . பேட்டி
என்பதைவிட , இருவரும் கொஞ்ச நேரம்பேசிக்கொண்டிருந்தோம் . என்னை ஒரு அறையில் செயற்கை விளக்கில்லாமல் ஜன்னலோரம் உட்கார்த்தி வைத்து , ஒரே ஓர் தெர்மோகோல் வைத்துவிட்டு , காமிரா கோணத்தைச் சற்று திருத்தி அமைத்துவிட்டு எதிரே உட்கார்ந்து கொண்டார் . பல விஷயங்கள் பற்றிப் பேசினோம் . பேட்டி முடிந்து படம் போட்டுக் காட்டினபோது , ‘ அட …. இது நானா ….?’ என்று ஆச்சரியமாக இருந்தது .
எல்லோரும் பயன்படுத்தும் காமிராதான் . தெர்மோகோல் ஏராளமாக சென்னையில் கிடைக்கிறது .
இருந்தும் , எதை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஒரு பாலுமகேந்திரா தான் இருக்கிறார் .
பாலு வுடன் பழக்கம் என் ஆரம்ப எழுத்துக் காலங்களிலேயே தொடங்கியது .
விசாகப்பட்டணத்தில் அவர் ‘ சங்கராபரணம் ‘ படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘ மறுபடியும் கணேஷ் ‘ படித்துவிட்டு , அதைப் படமாக எடுக்கப்போவதாக அனுமதி கேட்டு அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார் . பெங்களூருக்கு அவர் ‘ கோகிலா ‘ படம் எடுக்க வந்திருந்தபோது , கமல்ஹாசன் அவரை எனக்கு அறிமுகம் செய்வித்தார் . மூவரும் நிறையப் பேசினோம் .
பின்னர் ,‘ கரையெல்லாம் செண்பகப்பூ ‘ வை பாலு மகேந்திரா எடுப்பதாக , நடராஜன்
( பிற்பாடு பிரமிட் ) தயாரிப்பதாக , காலஞ்சென்ற ஷோபா அதில் நடிப்பதாக இருந்தது .
திறமையாக திரைக்கதை அமைத்து ரொம்ப உற்சாகமாக இருந்தார் . ஒரு கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை .
பாலு அதற்குப் பதில் ‘ மூடுபனி ‘ எடுத்தார் . பின்னர் , பல சந்தர்ப்பங்களில் நான் திரைக்கதை
எழுத , அவர் படம் எடுக்கும் நிலைக்குக் கிட்டே கிட்டே வந்தோம் . அவருக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற என் ஆசை பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது . ஓரளவுக்கு பாலு மகேந்திரா கதை நேரத்தில் என் சிறுகதைகள்
பத்தையும் , ஒரு குறுநாவலையும் சின்னத்திரைக்கு செய்து கொடுத்தார் .
சற்றே சமாதானமானோம் .
சமயத்தில் ஷோபாவைச் சந்திக்க நேர்ந்தது . சட்டென்று அறைக்குள் நுழைந்து பாலுவின் கழுத்தை ‘ அங்கிள் ’ என்று கட்டிக்கொண்டார் . என்னுடன் வந்திருந்த என் மனைவி
வீட்டுக்கு வந்ததும் , இது அங்கிள் உறவு இல்லை ’ என்றாள் . சில தினங்கள் கழித்து
குமுதம் இதழில் இருவரும் மணந்து கொண்ட செய்தி போட்டோவுடன் வந்திருந்தது .
அடுத்த ஆண்டு அந்தப் பெண்ணின் தற்கொலைச் செய்தி .
அந்த இளம் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று வியந்திருக்கிறேன் . அதுபற்றி பாலு சொனன தகவல்கள் அந்தரங்கமானவை . அவருடன் என் நட்பின் மரியாதை கருதி அவற்றை நான் எழுதவில்லை .
சுஜாதா வின் பல நாவல்கள் , படமாக்கப்படும்போது அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கப்படுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார் . அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ ஆனந்த தாண்டவம் ’ திரைப்படம் . ஆயினும் அவரே
‘ தன் நாவல்கள் இவரால் படமாக்கப் படாதா ’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின்
அது பாலு மகேந்திரா தான் .
அம்பலம் மின்னிதழில்சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே பாலு மகேந்திரா பற்றிகீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் .
” என் நாவல்கள் எதுவும்அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்யஅவரது ‘ கதை நேரம் ’ தொலைக்காட்சித் தொடரில் . எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார் . சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன . சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை . தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார் .
இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல் , உறுத்தாமல் , உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.
VIDEO