Thursday, September 26, 2019

தரணியில் தீப மானாய்!



வீணரை எதிர்த்து நின்று
    விடுதலை தீயில் வெந்து
ஆண்டுகள் ஒன்றை சென்ற
    ஆருயிர் தமிழே திலீபா!

தமிழ் தந்தான் வீதியிலே
    தமிழுக்காய் உயிர் தந்தாய்
உனை இழந்த இந்நாளில்
    உயிர் தமிழ்கள் கதறுதடா!

உரிமையை கோட்டையில் பேசி
    உணர்ச்சியாய் உரும்பிராயில் பேசி
நல்லூரில் நா நடுங்கபேசி
    நாமழ நீ பிரிந்தாயே!

அயல் நாட்டான் தலையீட்டால்
    அருந்தமிழே உனை இழந்தோம்
இதயம் வெடிக்கு  மிந்த
    இந்நாழும் நன் நாளோ!

ஓலக்கம் மீத மர்ந்து
    ஒப்பந்தம் நரிகள் செய்து
அடிமைக  ளாக்க எண்ண
     அகிம்சையில் போர் தொடுத்தாய்!

காந்தியின் தேசம் என்றார்
     காத்திடும் அகிம்சை என்றார்
உணவுநீர் ஒறுத்த உந்தன்
     உணர்வினை மதித்தா ரில்லை!

ஏற்றிய மெழுகாய் நீயும்
    எரிந்து நீ உருகிப்போனாய்
தமிழரின் உரிமை காக்க
    தரணியில் தீப மானாய்!

குறிப்பு :- திலீபனின் முதலாமாண்டு அன்று 'திலீபம்'இதழில் வந்த எனது கவிதை.இறுதி பகுதி மட்டும் நினைவில் இல்லாததால் மாற்றம் செய்துள்ளேன்.1991ல் உதயன் பத்திரிகையில் மீள்பிரசுரமானது.


Friday, August 30, 2019

இன்சுலின் என்றால் என்ன? What is insulin?


இன்சுலின் என்றால்... 


இன்சுலின் பானை


இரத்த சீனி மற்றும் ஆற்றல் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஒரு முக்கியமான ஹார்மோன் ஆகும்.

இன்சுலின் என்பது ஒரு ரசாயன தூதர், இது செல்கள் இரத்தத்திலிருந்து குளுக்கோஸ் என்ற சீனியை  உறிஞ்ச அனுமதிக்கிறது.

கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் உள்ள ஒரு உறுப்பு ஆகும், இது உடலில் இன்சுலின் முக்கிய மூலமாகும்.

குளுக்கோஸின் அளவு அதிகமாக இருப்பதால், இரத்தத்தில் சீனியின் அளவை சமப்படுத்த  இன்சுலின் அதிக உற்பத்திக்கு செல்கிறது.

இன்சுலின் ஆற்றலுக்கான கொழுப்புகள் அல்லது புரதங்களை உடைக்க உதவுகிறது.

இன்சுலின் ஒரு நுட்பமான சமநிலையாக்கி, இரத்தத்தில் சீனி மற்றும் உடலில் பல செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. இன்சுலின் அளவு மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அதிகப்படியான அல்லது குறைந்த இரத்த சீனி அறிகுறிகளை ஏற்படுத்தத் தொடங்கும். குறைந்த  அல்லது அதிக  இரத்தத்தில் சீனி நிலை தொடர்ந்தால், கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கும்.

Thursday, August 29, 2019

இன்சுலின் பிறந்த கதை

படத்தில் நீங்கள் பார்ப்பது  நீரிழிவு (Diabetes) எனும் கொடிய உயிர் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்

இரண்டாவது படத்தில் அவனது உயிர்காக்கும் அந்த மருந்து கிடைத்தவுடன் அவன் மீண்டும் பெற்ற வாழ்க்கை
ஆம்… அந்த உயிர்காக்கும் அமிர்தம் இன்சுலின் தான். நாள்தோறும் உலகின் பல கோடி மக்களின் உயிரைக்காப்பாற்றி வரும் இன்சுலின் பிறந்த கதை விந்தையானது.
Dr. பாண்டிங் எனும் அறுவை சிகிச்சை நிபுணர், அறிவியல் ஆராய்ச்சியில் பண்டித்தியம் கிடையாது. கார்போஹைட்ரேட் என்றால் பெரிதாக தெரியாது. அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை படிக்கிறார்.
“கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு நோய் ஏற்பட்டது, அதுவே கணையத்தில் இருந்து வரும் குழாயை (pancreatic duct) மட்டும் அடைத்தால் நீரிழிவு ஏற்படவில்லை.
இதைப்படித்ததும் அவருக்கு ஒரு யோசனை வருகிறது, அந்த ஒரு யோசனைதான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்ற இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.
நாயின் கணையத்தில் இருந்து குழாயை அடைத்து விட்டால் கணையம் முழுவதுமாய் இறந்து விடுகிறது. இருப்பினும் டயாபடிஸில் இருந்து தடுக்கும் ஏதோ ஒன்றை அந்த நாயின் மீதி இருக்கும் கணையம் சுரக்கிறது என்று அறிந்தார்.
banting and best
மருத்துவர் பாண்டிங் (கண்ணாடி அணிந்திருப்பவர்) மற்றும் பெஸ்ட்.
இந்த அறிவியல் ஆய்வுக்காக டொரண்ட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மெக்லியாய்ட் துணையை நாடுகிறார். அவரும் தனது ஆய்வகத்தில் ஒரு பகுதியையும், துணைக்கு Dr. பெஸ்ட் எனும் மருத்துவரையும் தருகிறார்.
பல நாள் ஆய்வுக்கு பிறகு நாயின் மிச்ச கணையத்தின் Islet of langerhans எனும் பகுதியில் இருந்து அந்த திரவத்தை எடுத்தனர். அதை கணையம் முழுவதும் நீக்கப்பட்டு நீரிழிவு உண்டாக்கப்பட்ட நாய்க்கு ஊசியாக செலுத்தினர்.
அந்த நாய்க்கு உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறைவதை கண்டனர். பின்பு அந்த திரவத்தை தூய்மை படுத்தி மனிதர்களுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டனர்.
அந்த உயிர் காக்கும் திரவம் தான் “இன்சுலின்” இந்த கண்டுபிடிப்புக்காக 1923-க்கான நோபல் பரிசு Dr. பாண்டிங் மற்றும் Dr. மெக்லியாய்ட் இருவருக்கும் வழங்கப்பட்டது.
இன்சுலின் கண்டறிந்து பாண்டிங் அதற்கான காப்புரிமையை மக்கள் அனைவரும் எளிதாக பெறுவதற்காக இலவசமாக அளித்தார். வரலாற்றில் நிலைத்தார்…
Understanding how a man's selflessness can change the world.

Monday, July 2, 2018

கரோஷி (カロシ)என்றால் என்ன?

ஜப்பானில் அதிக பணிச்சுமை காரணமாக 
பணிபுரியும் இடங்களில் ஏற்படும் மரணங்களைக் 
குறிப்பதற்கு இச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.

ஜப்பானைப் பொறுத்தவரை பணியாற்றுவது என்றால் 
காலை எட்டு மணி முதல் நான்கு மணி வரை வேலை 
செய்வது அல்ல. உறக்கம் கலைவதற்கு முன்பே 
அதிகாலை எழுந்து அலுவலகத்துக்கோ 
தொழிற்சாலைக்கோ சென்று விட வேண்டும். 
உணவு இடைவேளை என்பது பெயரளவுக்குதான். 
ஏதோ அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கைக்குத் 
திரும்பிவிட வேண்டும். ஏற்கெனவே குவிந்திருக்கும் 
வேலைகளை செய்து முடிப்பதற்குள் புதிய சுமைகளை 
ஏற்றிக்கொண்டே போவார்கள். ஒவ்வொன்றுக்கும் 
காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். குடும்பம், 
வீடு குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு 
24 மணி நேரமும் வேலையைப் பற்றி மட்டுமே 
சிந்தித்து, வேலையை மட்டுமே செய்துகொண்டு 
வாழ்ந்தால்தான் சம்பளம் வரும். இல்லாவிட்டால் 
சம்பளம் பறிபோவதோடு ஏச்சு, பேச்சுகளுக்கு 
அவமானங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜப்பானில் 
பணிச்சுமை காரணமாக இன்னமும் மாரடைப்பால் 
மரணம் அடைவதுடன், சிலருக்கு மன அழுத்தமும், 
சிலர் அமைதியாகத் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

வேலைச்சுமை தாளாமல் பெருகும் ‘கரோஷி’ 
கொலைகளை ஜப்பான் அரசாங்கம் நன்கு 
உணர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, 
ஐந்து தொழிலாளர்களில் ஒருவர் தீராத 
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், 
அவர் அநேகமாக இறந்து விடுவார் 
என்பதையும் அரசு அறிந்தே இருக்கிறது. 


கரோஷியை முன்வைத்து பல்வேறு ஆய்வுகள் 
புள்ளிவிவரங்களுடன் வெளி வருவதையும்கூட 
அவர்கள் கவனித்துக்கொண்டுதான் 
இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, 
டிசம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரை நடத்தப்பட்ட 
கணக்கெடுப்பின்படி 22 சதவிகிதத்துக்கும் 
அதிகமாக தனியார் நிறுவனங்கள் மாதத்துக்கு
80 மணி நேரம்வரை ஓவர்டைம் செய்யுமாறு 
தங்கள் ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவது 
தெரிய வந்துள்ளது.அடங்க மறுக்கும் பசியுடன் 
கரோஷி ஜப்பானைச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது. 

2015 கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்சுரி என்னும் 24 
வயது பெண் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை
செய்து கொண்டார். மாதம் 100 மணி
நேரத்துக்கு மேல் மேலதிக வேலை(Overtime) 
செய்யுமாறு அவர் பணியாற்றிவந்த விளம்பர 
நிறுவனம் கட்டாயப்படுத்தியதால் மட்சுரிக்கு 
அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சில மணி நேர 
உறக்கத்துக்காக இறுதிவரை மட்சுரி ஏங்கித் 
தவித்திருப்பது தெரியவருகிறது.
ஓவர்டைம் என்றும் பெயருக்குதானே ஒழிய, 
பெரும்பாலான நிறுவனங்கள் அதற்காக கூடுதல்
ஊதியம் எதையும் அளிப்பதில்லை. ஆரம்பத்தில் 
ஒப்புக் கொண்ட சம்பளப் பணத்தை மட்டுமே 
அவை வழங்குகின்றன. ஆனால் ஒப்புக்கொண்ட 
பணி நேரத்தைவிட இருமடங்கு நேரம் வேலை 
செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. 

ஊழியர்களிடமிருந்து முடிந்தவரை உழைப்பைக் 
கசக்கிப் பிழிந்துகொள்ள வேண்டும் என்னும் 
வெறியுடன் செயற்கையாக வேலை நெருக்கடியை 
அவ்வப்போது உருவாக்கி, அசாதாரணமாக 
காலக்கெடுவை விதித்து ஊழியர்களை 
மனஅழுத்தத்துக்கும் தற்கொலைக்கும் 
தள்ளிவிடுகின்றன. ஊழியர்களின் உடல், 
மனம் இரண்டும் பாதிப்படையும் என்பது 
தெரிந்திருந்தும், கரோஷி மரணங்கள் 
அதிகரித்து வருவதைக் கண்ணால் கண்ட 
பிறகும் இந்நிறுவனங்கள் தங்களைச் சிறிதும் 
மாற்றிக் கொள்ளத் தயாராகயில்லை.
காரணம், இலாபவெறி, இதற்கு ஜப்பான் அரசின் 
அங்கீகாரமும் உண்டு. 

ஒவ்வொருமுறை கரோஷி நிகழும் போதும் 
முணுமுணுப்புகளும் எப்போதேனும் 
எதிர்ப்புகளும் கிளம்பும் என்றாலும் 
இவற்றால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது 
என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. 
ஆம், தொழிலாளர் நலன்சார் சட்டதிட்டங்கள் 
இருக்கத்தான் செய்கின்றன. வேலை நேரம், 
விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் போன்ற 
அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் 
இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் 
அவையெல்லாமே காகிதத்தில் மட்டுமே 
சிறைபட்டுக் கிடக்கின்றன.எடுத்துக்காட்டுக்கு, 

சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் 
ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை 
அரசு கொண்டுவந்தது. ஆனால், 
இதையும் நிறுவனங்கள் கண்டு கொள்ளவில்லை. 

அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி 
நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் 
கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய 
விதிமீறல்களை ஒவ்வொரு முறையும் 
கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறது அரசு. 
அந்த வகையில், அதிகரிக்கும் கரோஷி 
கொலைகளுக்குக் காரணம் தனியார் 
நிறுவனங்கள் மட்டுமல்ல, ஜப்பான் அரசும் தான்.
இலாபம். இந்த ஒன்றுக்காகத்தான் ஜப்பானிய
ஊழியர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். 
இலாபத்தைப் பெருக்குவதற்காக எதையும் செய்யத் 

தயாராக இருக்கின்றனர், முதலாளிகள். 
தனியார்களைப்  பாதுகாக்க எதையும் செய்ய 
(அல்லது செய்யாமல் இருக்க) தயாராக இருக்கிறது அரசு.

அரசு என்பதே முதலாளித்துவத்தின் அடியாள் படையல்லவா?

கரோஷி என்பது வேண்டுமானால் ஜப்பானியச் 
சொல்லாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் 
நடக்கும் எல்லாமே மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக் 
கொண்டிருப்பவைதாம். தொழிலாளர்களின் 
உழைப்பை உறிஞ்சிக்கொள்வதிலும், அவர்களை சுரண்டி 

ஒடுக்குவதிலும் வளர்ந்த நாடு, வளரும் நாடு 
இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. 
அந்த வகையில் ஜப்பானியத் தொழிலாளர்களின் 
பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள 
தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

Thursday, January 25, 2018

சொல் முருகா!

நீ நின்ற இடமெல்லாம்
   நிறைவு தான்-என் முருகா!

நீ தந்த தமிழெங்கும்
   சிறப்புத் தான்-என் முருகா!

நீ கூட இருக்கையிலே
  பய மில்லை-என் முருகா!

நீ மயிலேறி வருகையிலே
  வனப்புத் தான்-என் முருகா!

நீ வந்து தேர் ஏற
  ஊர் சிலிர்க்கும்-என் முருகா!

நீ சுற்றும் இடமெல்லாம்
  மணம் கமிழும்-என் முருகா!
          
ஆனாலும்!
நீ இன்றி இவ்வுலகில்

  யார் எனக்கு-சொல் முருகா!

Tuesday, September 19, 2017

படி! படி!

மாணவர்களே!


  • பரீட்சையைப்போட்டு பெரிதாய் அலட்டிக் கொள்ளாதீர்கள். அமைதியாக, ஓய்வாய் இருங்கள்.
  • ஆறு முதல் எட்டு மணி நேரம் தினமும் தூங்குவது அவசியம். அப்படி உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுத்தால் மட்டுமே, நீங்கள் படிப்பதையெல்லாம், உங்களால் நினைவுபடுத்தி, தேர்வில் எழுத முடியும்
  • 5 முதல் 10 நிமிடங்கள் ஒவ்வொரு ஒரு மணி நேரம் ஒரு இடைவேளை எடுத்துக்க்கொள்ளுங்கள். நம் மூளையால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது. எனவே இடைவெளிகள் மிகவும் இன்றியமையாதவை.
  • எவ்வளவு படிக்கமுடியுமோ, அந்த அளவு மட்டுமே படியுங்கள். மிகவும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
  • கல்வியின் அதிமுக்கிய நோக்கம் என்னவென்றால், நீங்கள் எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொள்வது தான். மதிப்பெண்கள் பெறுவது மட்டுமல். இந்த விஷயத்தை என் வாழ்வில், மிக தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன். இப்பொழுதாவது உணர்ந்து கொண்டேனே! எதுவும் தாமதம் கிடையாது அன்றோ!
  • உங்கள் நண்பர்களை எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். அப்படி கேட்பது, தேர்வுக்கு முன் தேவையற்ற கவலை/பயத்திற்கு வழிவகுக்கும்.
  • நீங்கள் எடுக்கப்போகும் மதிப்பெண்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், படித்ததிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் நன்றாக புரிந்து படித்திருந்தால், மதிப்பெண்கள் தானாக வந்து தான் ஆக வேண்டும்.
  • கேள்வித்தாளைப் பார்த்தவுடன் பயந்துவிட வேண்டாம். உங்களால், கேள்விக்கு சம்மந்தப்பட்டு என்ன எழுத முடியுமோ, அதை எழுதுங்கள்.
  • தேர்வு அறையை விட்டு வெளியே வந்த பிறகு, பதில்களை பற்றி விவாதிக்க வேண்டாம், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்; அடுதது வரும் தேர்வுகளுக்கு நன்கு தயார் செய்ய முடியாமல் போகலாம்.

பெற்றோர்களுக்கு:

 மற்றவர்களுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட வேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர் தங்கள் சொந்த வழிகளில் திறமையானவர்கள். சிலரால் நன்றாக படிக்க முடியும்., சிலரால் நன்றாக விளையாட முடியும். சிலரால் நன்றாக பாடமுடியும்.சிலரால் நன்றாக ஆட முடியும். அனைத்து விரல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை ஆனால் ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது அல்லவா!
  • நன்றாக படிக்க அவர்களுக்கு உதவுங்கள். படி படி என்று சொல்லி மன அழுத்தம் கொடுக்காதீர்கள்.
  • ”நீ ஒன்றுக்கும் உதவாதவன்/ள்" என்றெல்லாம் சொல்லாதீர்கள். மாறாக, "உனக்கு திறமை உண்டு, இன்னும் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும், நிச்சயம் உன்னால் முடியும்” என்று ஊக்கம் கொடுங்கள்.
  • தேர்வுக்கு பிறகு, ஒரு வேளை உங்கள் குழந்தைகள், பதற்றமாக இருந்தால் அவர்கள் அருகில் இருந்து, “ஒன்றும் பெரிதாய் நீ இழக்கவில்லை, எதற்கும் கவலைப்படாதே. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்" என்று ஆறுதல் கூறுங்கள்.
  • குழந்தைகளுக்கு தற்கொலை/தற்காயப்படுத்தும் எண்ணங்கள், மனச்சோர்வு போன்றவை இருந்தால், அவர்களை தனியாக விட்டு செல்லாதீர்கள், மதிப்பெண்கள் என்பவை மட்டும் வாழ்க்கை இல்லை என்று புரிய வையுங்கள்.
நாம் அனைவருக்கும் தெரிய வேண்டிய உண்மைகள்: 
 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - ஒரு சராசரி மாணவர்.

  • ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் இணை நிறுவனர், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
  • சச்சின் டெண்டுல்கர் - தனது 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்
  • பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் தலைவர், கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்.
  • தாமஸ் ஆல்வா எடிசன் - விஞ்ஞானி, பள்ளியிலிருந்து பாதியில் வெளிவேற்றப்பட்டவர்
  • வின்ஸ்டன் சர்ச்சில் - பிரிட்டன் முன்னாள் பிரதமர், எழுத்தாளர் மற்றும் ஓவியர், தனது படிப்பில் சராசரிக்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்.

இந்த நபர்கள் இல்லை என்றால், நம் நிலைமை என்னவாக இருந்திருக்கும்??


"எடிசன் இல்லாமல் நம் வாழ்க்கை எப்போதும் இருண்டதாக இருந்திருக்கும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் இல்லை ஐ-போன்கள்.
பில் கேட்ஸ் இல்லாமல், கணிப்பொறி என்பது தூரத்து கனவாக இருந்திருக்கும்.
சச்சின் இல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் வெற்றி வரலாறு இல்லை" என பட்டியலில் நீள்கிறது.....



ஒப்பீட்டில் நல்லவள்...
நல்ல படிப்பவள்...
நல்ல அறிவாளி...
நல்ல திறமைசாலி...

இதில் எதுவும் வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை.

அது போன்று தான்...

மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல...

நீங்கள் நீங்களாக இருங்கள்...

Tuesday, August 8, 2017

உலக பழங்குடிகள் நாள் - 2017

2017 கருப்பொருள்(Theme):

பழங்குடி மக்கள் உரிமைகள் மீதான ஐ.நா.பிரகடனத்தின் 10 வது ஆண்டுவிழா..
(10th Anniversary of the UN Declaration on the Rights of Indigenous Peoples.)

உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டு ஆவணி (ஓகஸ்ட்) 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மார்கழி (டிஸ்சம்பர்)1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொல்பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் 90 நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி(370 million) பழங்குடியின மக்களின் உரிமைகளும், கலாச்சாரங்களும், பாரம்பரிய நிலங்களும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் இத்தினம் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
உலகின் மொத்த ஏழைகளில் 15 வீதத்தினர் பழங்குடியினராக உள்ளனர் என, ஐ.நா. கூறியுள்ளது.
உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள ஏழாயிரம் மொழிகளில், பெரும்பாலான மொழிகள், பழங்குடியினத்தவரால் பேசப்படுகின்றன என்றும், இவர்கள் ஐந்தாயிரம் விதமான பலதரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஐ.நா. கூறியுள்ளது.
2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, ஐ.நா.பொது அவை, பழங்குடியினத்தவரின் உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிக்கையை உருவாக்கியது. இதன் பத்தாம் ஆண்டு நினைவு இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்படுகின்றது.