Tuesday, July 18, 2017

பெண்களுக்கு அருள் புரியும் ஆடி அமாவாசை...!


ஆடி அமாவாசை  பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. 

அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.

விரதம் சரி… அது என்ன கதை? 

அழகாபுரி நாட்டு அரசன் .
கந்தலைராஜா பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, “உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்’ என்று கூறியது. 

அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, “உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்’ என்ற குரல் கேட்டது.

இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது,  பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்… அரற்றினாள்… தவித்தாள்… தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். 

உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரச
ன் அழகேசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.


இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், “இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள். 

மகிழ்ந்த அம்பிகை, “ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்’ என சொல்லி மறைந்தாள்.

Thursday, June 1, 2017

நாம் அழுதது இதற்கல்ல...!

நாம் அழுதது இதற்கல்ல

...
எங்கள்
கண்ணீர்
இப்படியா கருக்கொள்ள வேண்டும்!
நாம் அழுதது...
நீதிக்காய்!
நிம்மதிக்காய்!
விடுதலைக்காய்!
பால் வேண்டி அழுத
பிள்ளையின் பசிக்காய்...
தாயின் படுகொலைக்காய்...
காணாமல் ஆன எங்கள் காளையர்க்காய்...
வெளிச் சொல்ல முடியாது கதறியழும் சகோதரிக்காய்...!
கார் முகிலே
கழன்று விடு...
நீதி இதுவல்ல
நிர்க்கதிதான் பதில் இல்லை...!
ரணம் கொண்ட
வலி தெரியும்!
உறவழிந்த
உணர்வு புரியும்!!
பசி கொண்ட பிஞ்சின்
கதறல் புரியும்!
வேண்டாம் விலகிடு...!
வற்றிவிடு...!
வசந்தம் கொடு...!
வாழ்விற்கு வழி சமை...!

நாம் அழுதது இதற்கல்ல...!!!

Monday, October 24, 2016

சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமான கையிருப்பு!


''சிரிப்பு இதன் சிறப்பை சீர்துாக்கிபார்ப்பதே நமது பொறுப்பு
மனம்கருப்பா வெளுப்பா என்பதைக்காட்டும் கண்ணாடி சிரிப்பு!
சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமான கையிருப்பு!
வேறு ஜீவராசிகள் செய்ய முடியாதசெயலாகும் இந்தச் சிரிப்பு!''
என்ற நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல், சிரிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது.


சிரிப்புஎன்பது இறைவன் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில்சிரிப்புஎன்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல.



பொதுவாக உயர் பதவிகளில் உள்ள சிலர் பிறர் மத்தியில் அதிகம் சிரிக்க மாட்டார்கள். அது தமது  கௌரவத்தை பாதிக்கும் எனப் பயப்படுவர். இவர்கள் சிரிக்காமலும், அதிகம் கதைக்காமலும் இருப்பதுதான் அழகு என்று எண்ணுகின்றனர். எனவே, இவர்கள் பிறருடன் அதிகம் கதைப்பதில்லை; கலகலப்பாக இருப்பதில்லை. சிரித்தாலும் பதிலுக்குச் சிரிக்கக் கூடப் பஞ்சப்படுவார்கள்.இது தமக்கு கௌரவத்தை தரும் என எண்ணுகின்றனர் ஆனால் மற்றவர்களின் பார்வையில் வேறு மாதிரியாகவும் கீழ் நிலையில் வைக்கவுமே தோன்றும்.

'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அனுபவம்  உண்மைதானே.


'சிரிப்பும் சந்தோஷமும் நோயாளி குணமடைவதைத் துரிதப்படுத்தும்' என்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். நகைச்சுவையில் எத்தனையோ பயன்கள் உண்டு. எனினும், 'நல்ல நகைச்சுவை சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கிவிடும்' என்பது சிறப்பு.

யோகாவில் 'நகைப்புக்கிரியை' என்று ஒருவித அற்புதக் கிரியை உண்டு. அத்துடன் 'சிரிப்புத் தியானம்' என்ற ஒருவகைத் தியானமும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
ஜப்பானில் 'சிரிக்கும் புத்தர்' என்ற ஒருவர் இருந்தார். அவரது உண்மையான பெயர் 'ஹோட்டேஅல்லது பு டாய்' (Hotei or Pu-Tai)என்பதாகும். அவர் எப்பொழுதும் வாய்திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படித் தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார். அவர் சிரிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். அதைப் பார்ப்பவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்..!


சிரிப்பின் பயன்கள் வாய் விட்டுச் சிரிப்பதன் மூலம், முகத்தில் பொலிவும், கண்களில் ஒளியும் கூடும். மேலும் கண்களில் சாந்தமும், தெளிவும் உண்டாகும். நுரையீரல்
முழுமையாக விரிந்து, பிராண சக்தியை முழுவதும் கிடைக்கச் செய்கிறது. இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்கிறது. வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறுகிறது. சிறுநீரக செயற்பாடும் நன்கு அமைகிறது. நரம்பு மண்டலமே ஒருவிதப் புத்துணர்ச்சியை பெறுகின்றது. தொண்டைப் பிரச்னைகள், வாய்வு தொந்தரவுகள், மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து விடுபட முடிகிறது. சிரிக்கச் சிரிக்க மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், நன்கு துரிதமாகச் செல்கிறது. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாய் கிடைக்கிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைவதுடன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது.  நகைச்சுவை உணர்வானது, மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்று விடும். அந்தக் காலங்களில், அரசர்கள் மன இறுக்கங்களுக்குள்ளாகி விடுவார்கள் என்பதால், அரசவையில் விதுாஷகன் என்னும் விகடகவிகள் தங்களது நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜநிலைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்தனர்.


சிரிப்பு, உற்சாகம், மலர்ச்சி, மகிழ்ச்சி, ஆளுமை போன்றவற்றை உள்ளடக்கியதே நகைச்சுவை உணர்வு ஆகும். நல்ல நகைச் சுவை உணர்வு கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான் என்கின்றனர் சமூகவியலார்.நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திருப்பேன் என்று மகாத்மா காந்தி கூறியுள்ள கருத்து இதனை மெய்ப்பிக்கிறது.

இறுக்கம் தளரும் 'Humour Therapy' என்று அழைக்கப்படும் சிரிப்பு மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க, 'Immunoglobulin A' என்ற நோய் எதிர்ப்பு
சக்தி அவசியம் தேவை. சிரிக்கும் போது உமிழ்நீரில் இதன் அளவு அதிகரிக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. வலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சிரிக்கும் போது, உடலில் 'Endorphins' என்கிற இயற்கையான 'வலிகுறைப்பிகள்' உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்த நோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது சிரிப்பு என்பது நிரூபணமாகிஉள்ளது.


சிரிக்காத மனிதர் பற்றி கவிஞர் வைரமுத்து தன் கவிதையில் அழகாக சொல்லியிருக்கிறார்
சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்



இந்த குழந்தைகள் போல் அழகாக சிரியுங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை இது தரும்!